எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழுக்கு அளப்பரிய கேடு செய்யும். இது பற்றி பேரா வா.செ.கு அவர்களிடமும், கணேசனிடமும் வேறு யாருடனும் நான் கருத்துரையாட அணியமாக இருக்கின்றேன். மொழி வேறு எழுத்துரு வேறு என்று பற்பல கருத்துகள் வைப்பவர்களின் கருத்தோட்டங்களை நான் நன்கு அறிவேன். இப்போதைக்கு அண்மையில் நண்பர் கணேசன் இட்ட கீழ்க்காணும் பதிவிற்கு என் மறுமொழியைக் கீழே ஓர் இடுகையாக பதிவு செய்கிறேன். பின்னர் தேவை கருதி இது பற்றி தொடர்ந்து சில கூறுதல் வேண்டும்.

http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html

நண்பர் கணேசன்,
வணக்கம். நான் எத்தனையோ முறை கூறியிருக்கிறேன். தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளைப் பிரித்து எழுதத்தேவை இல்லை. அருள்கூர்ந்து இதனைச் செய்யாதிர்கள்!! இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும். தட்டச்சுப் பொறி காலத்திய சீர்திருத்ததை, இன்று வளர்ந்துள்ள கணிப்புரட்சி நாளில், சிலிக்கான், நானோநுட்பக் காலத்தில், முன்வைத்து வலியுறுத்துவது என்னை வியக்க வைக்கின்றது. தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே? அல்லது "கூடை" என்பதை க்ஊட்ஐ என்று எழுதலாமே? ஏன் தனியாக மேலும் பிற உயிர்க்குறிகள் தேவை? தமிழ் உயிர்-மெய் எழுத்து மட்டும் கொண்டு இயங்கும் alphabet நெடுங்கணக்கு கொண்ட மொழியில்லை. தமிழ் உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. நீங்கள் கூறுவது redundant system (தேவையில்லாத, வெற்றாக மேலும் குறிகளை சேர்ப்பது; இருக்கும் குறைகளைப் பெருக்குவது. ). நான் மிகவும் மதிக்கும் வா.செ.கு அவர்களும் நீங்களும் ஏன்தான் இப்படி இந்த அழிவுதரும் போக்கை வலியுருத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை? அருள்கூர்ந்து இப் போக்கினை உடனே நிறுத்த வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன் செல்வா
'டிசம்பர் 6, 2008

Comments

Sundar said…
எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைப்பவர்கள் கவனத்துக்கு:

உங்கள் பரிந்துரைக்குப் பின்னாலுள்ள நல்லெண்ணத்தை மதிக்கிறேன். ஆனால் அவற்றை ஏன் ஏற்க முடியாது என்று கீழே சொல்லியுள்ளேன்.

சுருக்கமாக குறைந்த எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டுமாயின் அஃவ்மேன் குறிமுறையைக்கூட பயன்படுத்தலாம்! ஆனால், அவை கணிப்பொறியில் சேமிக்குமிடத்தில் எப்படியும் செய்யப்படுகின்றன.

ஒன்றை நாம் உணர வேண்டும் எழுதுவதை எளிதாக்குவது என்பது படிப்பதைக் கடிதாக்கும். Cognitive load என்பது ஏதாவது ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். எழுதுவது ஒருமுறையும் படிப்பது பல கோடி முறைகளும் இருக்கையில் படிப்பதைத்தானே எளிதாக்க வேண்டும்?

இன்னொன்றையும் பார்க்க வேண்டும் தமிழ் எழுத்து என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் இல்லை. அது alphabet என்றும் சொல்ல முடியாது abugidaவும் இல்லை. பார்க்க: http://web.archive.org/web/20050911032215/http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/kolam3/ceyyul1/ceyyul1.html#eluttu இன்று alphabet முறை என்றால் நாளை சீன மொழி செல்வாக்கு பெறும்போது அந்த முறைக்கு மாற முடியுமா? தமிழ் ஒலிப்புக்கும் வரிவடிவத்துக்கும் உள்ள பிணைப்பைக் குலைக்க வேண்டாம். ஒரு எழுத்தின் வடிவத்தை மாற்றுவது வேறு, எழுத்துக்களின் கணத்தையே மாற்றுவது வேறு.
சுந்தர் உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

இந்த சிறு இடுகை பல மின்மடல்களின் வழியே நண்பர் கணேசனோடு இன்னும் ஒரு சிலருடன் உரையாடியதின் சிறு பகுதி.

ஆ என்பதைக்கூட அ + கால் (அரவு) என்று இடலாம், ஈ = இ+கால், அப்புறம், கீ என்பதும் வேண்டாம், கி + கால் போதும், ஆமாம் கூ வும் வேண்டாம் கு +கால் போதும் என்றெல்லாம் சுருக்கிக்கொண்டே போகலாம் என்பார்களே இன்னும் சிலர் என்று முன்வைத்தேன். கை, கெ, கே கொ,கோ என்பதில் உள்ள "துணைக்குறிகளை" க என்னும் எழுத்துக்கு வலப்புறம் இட்டுக் காட்ட வேண்டும் என்கின்றனர் இன்னும் சிலர். இப்படியான சீர்திருத்தங்கள் ஏராளம். தமிழ் நெடுங்கணக்கு விளையாட்டுக்களம் அல்ல. கடைசியாகக் கூறினேன், ஏன் 0,1 ஆகிய இரண்டை வைத்துக்கோண்டே எல்லாவற்றையும் எழுத்லாமே?! இன்று எந்த சீர்திருத்தமும் வேண்டாம். கூ என்பதைக் கூட மூ என்பது போல எழுத்து சீர்திருத்தம் செய்ய வேண்டாம். ஒரு மொழியைப் பயில ஆயிரக்கணக்கான குறிப்புகளை நினைவில் கொள்ளுதல் வேண்டும். அப்படியிருக்க ஒரு சில எழுத்து வகைகளை நினைவில் கொள்ளுதல் கடினம் இல்லை.

உகர உயிர்மெய் எழுத்துகளில்

குடுமுருழு ஆகிய 5 ம் ஒரு வகை
ஙுசுபுயுவு ஆகிய 5 ம் வகை
ஞுணுதுநுலுளுறுனு ஆகிய 8ம் ஒருவகை

ஆக உகரக்குறில் 3 வகை

அடுத்து ஊகார உயிர்மெய்:

கூ ஒரு வகை
டூமூரூழூ ஆகிய 4ம் ஒரு வகை
ஙூசூபூஉயூவூ ஆகிய 5 ம் ஒரு வகை
ஞூணூதூநூலூளூறூனூ ஆகிய 8ம் ஒரு வகை.

ஆகவே இந்த 3+4 = 7 வகையை நினைவில் கொள்வது கடினம் என்றால் ஒரு மொழியை, அதுவும் இலக்கண வரம்புகள் கொண்ட தமிழ் மொழியை எங்ஙணம் கற்கப்போகிறார்கள்? ஆங்கிலத்திலே 26எழுத்துகள்தாம் என்பது வெறும் ஏமாற்றுப் பேச்சு. எழுத்துகளைக் கூட்டி படிக்க ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இது சீன மொழியைக் காட்டிலும் கூடுதுலாக இருக்கும் என்பது என் தேறா முன்குறிப்பு. -tion, -shion, -sion, --ough, a in apple, a in appeal, a in ape , lk in milk-silk, lk in talk-walk, s in sugar, ch in chagrin, ch in character, ch in chair என்று அடுக்கிக்கொண்டே போகலாம். என்ன, ஆங்கிலம் படிப்பவர்கள் உலகில் குறைந்தா போயுள்ளார்கள்? கையில் சிராய்ப்பு என்று கூறி கண்ணைத் தோண்டி பிடுங்குகின்ற வேலையாக் இருக்கின்றது. சீர்ர்திருத்தம் பரிந்துரைப்போர் எண்ணிப்பார்க்க வேண்டும். இது பற்றி விரிவாக எழுத வேண்டும். நான் மிக மதிக்கும் என் பேராசிரியர் வா.செ.கு, நண்பர் கணேசன் அவர்கள் தீர எண்ணிப்பார்க்கவேண்டும். உகர-ஊகார சீர்திருத்தத்தால் விளையும் கேடு அளப்பரியது. மிகத்தவறான வாதம்.
Tamil Treasures said…
very nice work, I chanced upon your site from your wikipedia article on Heron. Please keep up the great work, Sir.

I fully support your passion to keep Tamil writing as is. (It is a really dumb idea to split the vowel, consonant pairs).

Indian languages have lived and grown long long time and have evolved not just great intellects and genius-es and also great emotional giants (realized souls). The language structure plays a huge role in easy teaching and learning and clear thinking. As you rightly point out, keeping letters to 26 requires learner to learn new letter-combinations and see each word as a new whole.

Combining each consonant and vowel into a phonetic symbol is a great language design idea that has probably evolved and survived. If anything, English should think of modifying its writing style to a phonetic format. gradually. little by little.

I liked your writing and Mr.Sundar's excellent followup mail to.

Thanks
Ravi
RJAY,

உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தங்களைப் போல் பலரும் புரிந்துகொண்டு இவ்வகையான மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் வருகை புரிந்தது கண்டும் மிக்க மகிழ்ச்சி. இயலும் வகையில் தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஆக்கங்கள் தர வேண்டுகிறேன். நன்றி.
வணக்கம்.
செல்வா அவர்களே!

உங்கள் தமிழ்வெளி அழகு.

பாராட்டுக்கள்.

நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

(குறிப்பு உங்கள் தனிமடல் தொடர்பை எதிர்பார்க்கிறேன்.)
முற்றிலும் உண்மை.

எழுத்துமுறை ஒரு பண்பாட்டுச்சின்னம். Its a Cultural Relic. அதை மாற்றுவது சரியில்லை.

//இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும்//

இன்னொரு மன்றத்தில், பழஞ்சீனத்தின் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் கல்வெட்டியிலாளர்கள் மட்டும் படிக்கும் "பொருட்களாக" ஆகிவிட்டன என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தமிழுக்கும் பொருந்தும்.

பி.கு: இன்னும் நான் எழுத்துச்சீர்திருத்தத்துக்கு முந்தைய வடிவங்களை காட்டும் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை வைத்துக்கொண்டு தான் தமிழை பல காலமாக வாசித்து வருகிறேன் :)
வின்னோத்,

உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி :)
:)

இதிலாவது நாம் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரியான கருத்த்தைக்கொண்டுள்ளோம் ;)
எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்புவதாகவே அமையும்.
பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.
நூற்றாண்டுகள் தோறும் நேர்ந்த தமிழ் எழுத்து மாற்றம் குறித்த படம் காணலாம். இதில் எனக்கு சில ஐயங்கள்:

* இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

* தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

* இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

* இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால் இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.

நன்றி.
ரவி உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. மொழியில்
புதிய ஆக்கங்களைப் பெருக்க வேண்டுமே அல்லாமல், இப்படி மொழியைக் கெடுத்து உள்ள நூல்களையும் படிக்க முடியாமல்
செய்வதால் என்ன பயன்? பல்லாயிரக்கணக்கான நூல்களையும்,
துண்டு வெளியீடுகளையும் புதிய முறையில் அச்சிட்டு நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் பெரும்பாழ் செய்வதா சீர்திருத்தம்?
அந்த உழைப்பிலும், பணத்திலும் எத்தனை புதிய ஆக்கங்கள் செய்யலாம்!ஒருசில உகர ஊகார வடிவங்களை நினைவில் கொண்டு கற்க இயலாதவர்கள், எப்படி ஒரு மொழியைக் கற்கப்போகிறார்கள்? ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான எழுத்துக்கூட்டல்களையும் ஒலிப்புகளையும் நினைவில் கொள்ளவேண்டுமே, ஏன் அவர்கள் முன்னேறவில்லையா?
Unknown said…
This comment has been removed by a blog administrator.
Mangai said…
இன்றைய தலைமுறை தமிழில் ஆர்வமில்லாமல் இருப்பதற்கு தமிழ் எழுத்து காரணம் இல்லை.

தமிழ் தவிர அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதும், மற்றும் தமிழ் பாடங்கள் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் எளிமையாக இல்லாமல் இருப்பதும் ஒரு விதத்தில் காரணம்.
மொழியை பிள்ளைகள் விரும்பிப் படிக்க வேண்டும் என்றால் பாடங்களை எளிமைப் படுத்த வேண்டும்
.

தேர்வுக்காக படிப்பது என்ற நிலை மாறினாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும். மொழி பாடத் திட்டம் என்பதும் பிற பாடத் திட்டங்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை.

மொழியை சீர் திருத்த முயற்சி செய்வதை விட்டு பாடத்தில்
திருத்தம் கொண்டு வந்தாலே போதும்.
வாருங்கள் மங்கை!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை! நீங்கள் கூறும்

//மொழியைச் சீர் திருத்த முயற்சி செய்வதை விட்டு பாடத்தில்
திருத்தம் கொண்டு வந்தாலே போதும்.//

என்னும் கருத்தை கல்வியாளர்கள் உண்மையிலேயே கருத்தில் கொண்டு செயலாற்றினால் எவ்வளவோ முன்னேறுவோம்!

தேர்வுக்காக படிப்பது, தேர்வுக்காக மட்டுமே படிப்பது என்னும் நிலையும் மாறவேண்டும். இது உலகளாவியுள்ள குறைபாடு.

நன்றி.
அன்பின் இளங்கோவன்,

கட்டுரைக்கு நன்றி. திரு. பெரியண்ணன் சந்திரசேகர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைக்கும் சுட்டி கொடுங்கள்..

http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

குழந்தைகளும், வெளிநாட்டவர்களும் தமிழ்மொழியை எளிதாகக் கற்பதற்கு இம்மாற்றம் செய்ய விரும்புகிறார்களாம். இதைப் போல ஒரு அரைவேக்காட்டுத் தனமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது. கடந்த ஏழாண்டுகளாக அமெரிக்காவில் வார இறுதியில் நாங்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளியில் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னைப் போலவே நிறையப் பேர் அமெரிக்காவின் பிற பகுதிகளில் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். யாரை வேண்டுமானாலும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.

இங்குள்ள குழந்தைகள் 40 - 50 மணி நேரப் பயிற்சியில் பெரும்பாலான தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பதாக எந்தக் குழந்தையும் எழுத்துக்களைக் குறையாகச் சொன்னதில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தமிழில் பேசாமலிருப்பதே முக்கியத் தடையாகும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க விரும்புகிறார்கள் குழந்தைசாமி போன்ற அறிஞர்கள்.

தமிழைப் பயிற்று மொழியாகப் படித்து வரும் வசதியற்ற நலிந்த பிரிவு மானவர்களையே இப்புரட்டுச் சீர்திருத்தம் பாதிக்கும். குழந்தைசாமிகளின் பேரன் பேத்திகளையல்ல.

'தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்."' என்ற சுப. நற்குணனின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி - சொ. சங்கரபாண்டி
தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.


இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.

மேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.


தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?


தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.


தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?

உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?
வாருங்கள் சங்கரபாண்டி. வணக்கம்.

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க ந்ன்றி. முனைவர் பெரி சந்திரசேகரன் அவர்களின் கட்டுரையை முன்னமே பார்த்திருந்தேன், நீங்கள் சுட்டியமைக்கும் மிக்க நன்றி.
நாங்களும், எங்களைப் போன்று இன்னும் பலரும் கனடாவில் தமிழ்
பயிற்றுவிக்கும் பொழுது இவை குறையாகவோ தடையாகவோ யாரும்
உணரவில்லை.

தமிழுக்கு உண்மையான ஆக்கம் தரும்
நூறாயிரம், அல்ல அல்ல மில்லியன், கணக்கான பணிகளை விட்டுவிட்டு,
இப்படிக் குலைக்கும் செயல்களில்
ஈடுபடுகிறார்களே என்று எண்ணி நெஞ்சு வேகுகின்றது. ஒரு மொழியை ஒருவர் கற்றுக்கொள்ள அறிந்திருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான செய்திகளில் இந்த 3-10 இகர ஈகார, உகர ஊகார எழுத்து வடிவங்களை
நினைவில் கொள்ள வேண்டியிருப்பதை ஒரு குறையாக நினைத்து சீர்திருத்துகிறேன் என்னும் பெயரில் தமிழை சீரழிக்கிறார்களே.
அடுத்து என்ன கெ கே என்பதில் ஒற்றைக் கொம்பு இரட்டைக்
கொம்புகளை வலப்புறம் இட வேண்டும் என்பார்கள்.
லேகோகட்டிகளை வைத்து விளையாடும்
ஆட்டமாக தமிழ்மொழியை நினைத்துத்
தங்கள் விருப்பம்போல் மாற்ற
நினைப்பது வியப்பளிக்கின்றது.
நான் மிக மதிக்கும் பேரா. வா.செ.கு போன்றவர்கள் இதனைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது.
வாருங்கள் சு.ப.நற்குணன். தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. எது தேவை, என்ன நன்மை தீமை என்னும் அலசல்கள் இல்லாமல் இப்படி செய்ய முனைவது வியப்பளிக்கின்றது. உலகத் தமிழர்களின் ஒப்புதல் ஏதும் இல்லாமல் அவர்கள் பெயரால் இப்படிச் செய்வது இன்னும் வியப்பளிக்கின்றது. ஏற்கனவே தமிழ் மொழியில் இருக்கும் அனைத்தையும் மீண்டும் ஆக்கிக்கொண்டிருப்பதா அறிவுடைமை?!
Harrispan said…
நெடில் எழுத்தை குறிக்கும்
நெடில் குறியை பொதுமை படுத்துவது
என் கருத்து.

இலகுவான சீர்மை.

எல்லா நெடில் எழுத்தை நெடில் குறியை
கொண்டு அமைப்பது முறை தானே?

மற்றபடி எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைப்பவர்கள்
தமிழ் கற்பதில் எளிமை என்னும் முலாம் பூசி
தம் எண்ணத்தை வலிந்து திணிக்க
முயல்வது புரிகிறது.

தமிழ் கற்பதில் ஆர்வம முக்கியம்.

அதை விடுத்து எழுத்துகளின் எண்ணிக்கை
குறைப்பு எளிதாக்கும் என்பதை ஒப்ப முடியலை

எப்படியாயினும் 247 எழுத்துக்களை கற்பது
வேண்டும்.

பல ஆயிரம் சொற்களை கற்கததான்
வேண்டும்.

படிக்காத காமராசர், பெரியார், அவரின் பின் அண்ணா
வலியுறுத்தியது தமிழன் படிக்க வேண்டும் என்பது தான்

தமிழ் தான் படிக்க வேண்டும் என இல்லை.

ஆனால் காமராசர், பெரியார், அவரின் பின் அண்ணா
ஆகிய தலைவர்களை படித்தவர்கள்
தமிழ் படிக்க, தமிழில் படிக்க விரும்புவதே சிறப்பு.

தாய் மொழி படிக்காத யாரும் குறைந்த அளவிலான
மனித நேய படிப்பாளர்களே.


(பெரியார் பெயரிட்ட)

பன்னீர்செல்வம்.
வாருங்கள் பன்னீர்செல்வம்.
உங்கள் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி.

//எல்லா நெடில் எழுத்தை நெடில் குறியை கொண்டு அமைப்பது முறை
தானே?//

இப்பொழுது மாற்றத் தொடங்கினால் இப்படிப்பட்ட முறைகள் இது மட்டுமா,
பற்பல வகுக்கலாம்.
"சீராக்கம்", "குறைப்பு"
என்று தொடங்கினால் ஏற்கனவே உள்ள மில்லியன் கணக்கான பக்கங்களையும் ஆவணங்களையும் பல்வேறு படைப்புகளையும் மீண்டும் உருவாக்க வேண்டும். எத்தனை உழைப்பு, திருத்தம், பொருள் செலவு, நேரச்செலவு, ஆகும்? இது அறிவுடைய செயலா? இவ்வுழைப்பையும், நேரத்தையும், பொருளையும், எத்தனையோ புதிய ஆக்கங்களுக்குப் பயன்படுத்தலாமே!!

நீங்களே சொல்கின்றீர்கள்:
//எழுத்துகளின் எண்ணிக்கை
குறைப்பு எளிதாக்கும் என்பதை ஒப்ப முடியலை
//

அதுவே என் கருத்தும்.

அதே போல நீங்கள் சொல்லும்,
//பல ஆயிரம் சொற்களை கற்கததான்
வேண்டும்.// என்பது உண்மை என்பதனை ஏன் உணர மறுக்கின்றனர்?!

கருத்துகளுக்கு நன்றி
பொல்லாத சீர்திருத்தம்
பொன்னான நம் தமிழைக்
கொல்லவரும் கொலைக்கருவி!
ஆன்மிகப் பெயரால்
முடியாத ஒருசெயலை
அறிவியலின் பெயர்சொல்லி
அழிக்கவரும் நச்சுநிரல்!
மெல்லத் தமிழழிக்கும்
குள்ளநரிச் சூழ்ச்சி
அறிவியலின் ஆழமும்
கணியியலின் அகலமும்
பொறியியலின் நுட்பமும்
அருந்தமிழின் ஒட்பமும்
அறிந்த பேரறிஞன்
அன்புக்குரிய எங்கள்
செல்வகுமார்ச் செம்மல்
அளித்திடும் விளக்கம்
தமிழ்ப்பகை கலக்கும்!
செல்வத் தமிழனே
ஏற்றிடுவீர் என் வணக்கம்
சாய்விலா நடுநிலை
ஓய்விலா உழைப்பு
நுண்மாண்நுழைபுலம்
ஓருருவாய்த் திரண்டமைந்த
ஒப்பிலா அறிஞனே!
உம் தலைமை ஏற்று நின்றோம்!
உமக்கே நாம் ஆட்செய்வோம்!
வாழி நலம் சூழ்!
தமிழ் எழுத்துச் சீர்மை பற்றிய தங்கள் கருத்து சாலச் சிறந்தது. எழுதுபக்கங்களில் Tamil-99 முறையும், இணையதளப் பதிவுகளில் nhm எழுத்துப் பதிவு முறையும் பழக்கத்துக்கு வந்து வழக்கமாகிவிட்ட நிலையில் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டாத ஒன்று மட்டுமன்று குழப்பமானதும் ஆகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கும் மட்டுமன்று. தமிழ் பயிலும் அயன்மொழியாளர்க்கும் அது குழப்பத்தை விளைவிக்கும். tamil-99 முறையில் shift-ஐப் பயன்படுத்தாமலேயே எல்லா எழுத்துக்களையும் அச்சுப்பதிவு செய்யும் நிலை வந்துவிட்ட பிறகு புதிய சீர்திருத்தம் என்பது சீரழிவாகவே முடியும்.
பேராசிரியர் மறைமலை ஐயா உங்கள் வரவுக்கும், கருத்துகளுக்கும்
மிக்க நன்றி.

வலைப்பதிவர் Tamil Virtual Forum
வாருங்கள். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
Ram said…
thamizhai aen thamizh engireer?
eluthuglai matruvathu pole peyarayum maatridalame? 'thamizh' enbathu evvaru thanichirappu kondadho adhu pola adhan athunai ezhuthugalum sirappaanavai. thamizhenbathai veru peyarittazhaithaalevvitham maaaru padumo avvithame athanezhuthukalai maatrum podhum undaagum.
திரு இராம்,

வருக!

//'thamizh' enbathu evvaru thanichirappu kondadho adhu pola adhan athunai ezhuthugalum sirappaanavai.//

ழகரம் தமிழில் சிறப்பெழுத்து (இன்னும் சில மொழிகளிலும் உள்ளன).பிற மொழிக்குப் போகும்பொழுது திரியும். வள்ளி, வல்லி, அழகன், ஞானசம்பந்தன் என்பதனை ஆங்கிலத்தில் எழுதிப்பாருங்கள், ஆங்கிலேயன் எப்படி ஒலிக்கின்றான் என்று பாருங்கள். நீங்கள் கூறும் ஒலிகள் அந்தந்த மொழிக்குச் சிறப்பானவை. தமிழில் வழங்கும்பொழுது தமிழ் மொழிக்கு ஏற்றார்போலவே திரியும். ஒரு மொழியில் இருக்கும் ஒலிகளாக இருந்தாலும் கூட, ஏற்கும் மொழியின் இயல்புக்கு உகந்தவாறு மாறும். திருவனந்தபுரம், தூத்துக்குடி என்னும் சொற்களில் உள்ள எல்லா ஒலியன்களும் ஆங்கிலத்தில் இருந்தாலும், அவர்களின் மொழியின் இயல்புக்கு ஏற்றார்போல Trivandrum, Tutucorin என்று எழுதுகிறார்கள். வட இந்தியர்களும்கூட த்ரிவேந்த்ரம் என்கின்றனர்.
Mathi said…
ஐயா..

நீங்கள் கூறிய இகர, ஈகார, உகர, ஊகார மெய்யெழுத்து வடிவங்களை ஏழுவிதமாக அமைத்துள்ளீர்கள்...சிறப்பு..

அதிலே ளு மற்றும் ளூ - ஞு கர வரிசையில் வைத்துள்ளீர்கள்..

அவை குகர வரிசையில் வரும் என நினைக்கிறேன்.
மதிவாணன், வருக. ளு, ளூ என்பன உகர ஊகார வரிசையில்தான் வருதல் வேண்டும். நீங்கள் குறிப்பிடுவது எங்கே எனத் தெரியவில்லையே!! நன்றி.
Mathi said…
ஐயா

டிசம்பர் 19, 2008 தேதி பதிவில்

ளு
கு,டு,மு வில் வருமா

அல்லது

நு,ணு வரிசையில் வருமா

இடம் மாறியுள்ளதோ என சந்தேகம்
ளு என்னும் உயிர்மெய் இடப்புறமாக முடியும் கு,டு,மு போன்றவற்றுடன் சேர்ந்தது.
அந்தச்சுழியை விலங்கு என்றும் அழைப்பார்கள். நு, ணு முதலிய எழுத்துகளில் வரும் உகரக்குறி மடக்கி வலப்புறமாக முடியும்படி உள்ளது. அவற்றுடன் ளு சேராது. ஆனால் ளு என்பதைத் து, நு போன்று வலப்புறம் முடியுமாறு எழுதினால் அவற்றுடன் சேரும்!! பழைய முறையில் அப்படி எழுதியும் பார்த்திருக்கின்றேன். ஆனால் அது னு என்பதோடு குழப்பம் ஏற்படுமாறும் இருக்கும்.

Popular posts from this blog

அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)