Saturday, December 6, 2008

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழுக்கு அளப்பரிய கேடு செய்யும். இது பற்றி பேரா வா.செ.கு அவர்களிடமும், கணேசனிடமும் வேறு யாருடனும் நான் கருத்துரையாட அணியமாக இருக்கின்றேன். மொழி வேறு எழுத்துரு வேறு என்று பற்பல கருத்துகள் வைப்பவர்களின் கருத்தோட்டங்களை நான் நன்கு அறிவேன். இப்போதைக்கு அண்மையில் நண்பர் கணேசன் இட்ட கீழ்க்காணும் பதிவிற்கு என் மறுமொழியைக் கீழே ஓர் இடுகையாக பதிவு செய்கிறேன். பின்னர் தேவை கருதி இது பற்றி தொடர்ந்து சில கூறுதல் வேண்டும்.

http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html

நண்பர் கணேசன்,
வணக்கம். நான் எத்தனையோ முறை கூறியிருக்கிறேன். தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளைப் பிரித்து எழுதத்தேவை இல்லை. அருள்கூர்ந்து இதனைச் செய்யாதிர்கள்!! இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும். தட்டச்சுப் பொறி காலத்திய சீர்திருத்ததை, இன்று வளர்ந்துள்ள கணிப்புரட்சி நாளில், சிலிக்கான், நானோநுட்பக் காலத்தில், முன்வைத்து வலியுறுத்துவது என்னை வியக்க வைக்கின்றது. தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே? அல்லது "கூடை" என்பதை க்ஊட்ஐ என்று எழுதலாமே? ஏன் தனியாக மேலும் பிற உயிர்க்குறிகள் தேவை? தமிழ் உயிர்-மெய் எழுத்து மட்டும் கொண்டு இயங்கும் alphabet நெடுங்கணக்கு கொண்ட மொழியில்லை. தமிழ் உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. நீங்கள் கூறுவது redundant system (தேவையில்லாத, வெற்றாக மேலும் குறிகளை சேர்ப்பது; இருக்கும் குறைகளைப் பெருக்குவது. ). நான் மிகவும் மதிக்கும் வா.செ.கு அவர்களும் நீங்களும் ஏன்தான் இப்படி இந்த அழிவுதரும் போக்கை வலியுருத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை? அருள்கூர்ந்து இப் போக்கினை உடனே நிறுத்த வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன் செல்வா
'டிசம்பர் 6, 2008

Tuesday, March 13, 2007

தமிழ்வெளி என் முதல் முயற்சி.

நம் தமிழிலே
பயன் பெருக்கும் அறிவியலைப் பற்றி
பலரும் அழகாக எழுதுவதைக் கண்டு மிகவும் மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.
முன்னோடி வலைஞர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

என் எண்ணங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஒரு
'ப்லா'க் வேண்டும் என்று எண்ணினேன். பல நண்பர்கள் பலகாலமாக பரிந்துரைகள் செய்து வந்தனர்.

இதோ துணிந்தும் விட்டேன்.

முதலிலே தமிழ் முறைக்கு முரண்பட்ட
பிறமொழி ஒலிகளைக் குறிக்க ஒரு நல்ல முறை வேண்டும்.
ஏனெனில் இவ்வகை ஒலிகள் பல இடங்களில் ஆள வேண்டிய
கட்டாயம் ஏற்படுகின்றது.

Blog என்னும் சொல்லையே எடுத்துக்கொள்ளுங்கள்.
இதில் வரும் b, g ஆகிய இரண்டு ஒலிகளும் தமிழ் முறைப்படி
எழுத இயலாது. ப்லாக் என்று எழுதினால் plaak என்றுதான் ஒலிக்க வேண்டும்.
இது ஏதோ பல்லுக்கு வரும் கோளாரோ என்று எண்ண நேரிடும்

b என்பதைக்குறிக்க ப் என்னும் மெய் எழுத்துக்கு முன்னதாக ஒரு சிறு குறி இடலாம். இதனை முன்கொட்டு என்று நான் கூறுகிறேன்.
எடுத்துக்காட்டாக 'ப் = b

ga என்னும் ஒலியைக் குறிக்க ககரத்தின் முன்னே ஒரு முன்கொட்டு இடலாம்.
Gandhi = 'காந்தி

எனவே blog என்பதை தமிழில் 'ப்லா'க் ன்று எழுதினால் ஒலித்திரிபு சற்று குறைவாக இருக்கும்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

தமிழ் ஆசிரியர்கள் சகன்னாதன் என்று எழுதுவதை நாம் 'சகன்னாதன் என்று எழுதலாம்.

டேவிட் என்று எழுதினால் தமிழில் tavit என்றுதான் ஒலிக்க வேண்டும். முதலில் வரும் வல்லினம் எப்பொழுதும் வலித்தே ஒலிக்கும் (முதலில் டகரம் வரக்கூடாது என்பது வேறு செய்தி). இதனை 'டேவி 'ட் என்று எழுதினால் David என்றே ஒலிக்க இயலும். அதே போல 'டம் 'டம் வானூர்தி நிலையம்.

தாதாபாய் நௌரோசி என்று ஒருவர் இருந்தார் தெரியுமா? இவர் பெயரை 'தாதாபாய் நௌரோ'சி என்று எழுதலாம். 'தாதாபாய் என்பதில் உள்ள இரண்டாவது தா வுக்கும் பா வுக்கும் முன்கொட்டு ஏன் இடவில்லை? தமிழ் இலக்கண விதி மிக எளிமையானது. ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும். எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.

ஆகவே பாபு என்று தமிழில் எழுதினால் paabu என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும். எழுத்தொலியை திருத்தமாக சொல்லில் ஒலிப்பதற்குத் தமிழில் பலுக்கல் என்று பெயர். எனவே பலுக்கல் என்றால் என்ன கலக்கல் என்று மலைக்காதீர்கள். எப்படிப் பலுக்க வேண்டும் என்று உணர்தல் வேண்டும்.

அடுத்ததாக இந்த F என்னும் ஒலி மிகத் தேவைப்படுகின்றது. இதனை தமிழில் ஃப என்று எழுதுகிறோம். F இன் ஒலி கீழ் உதடு மேல் பல்லுடன் உரசி எழுவது. இதற்கு மிக நெருக்கமான தமிழ் ஒலி வ. எனவே 'வ என்று எழுதலாம். Faraday என்பதை பாரடே என்று எழுதலாம். இப்பொழுது ஃபாரடே என்று எழுதுகிறோம், ஆனால் என் பரிந்துரை 'வாரடே என்று எழுதலாம் என்பதே.

சரி முடித்துவிட்டதா? ஐயோ இல்லையே!!

வைணவப் பெரியார் இராமானு'சர் ஆண்டாளில் சொல்லான 'சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்தேன்' என்று ஒரு சிறுமி பாடக் கேட்டவுடனே முழுவுடலும் தரை தழுவ விழுந்து சேவித்தாராம். ஆண்டாளே வந்து பாடியது போல் உணர்ந்தாராம். அந்த சிற்றம் சிறு காலை என்பது தமிழில் வைகறை என்று கூறுவர். சமசுகிருதத்தில் உ^சா என்பர். சில பெண்மணிகளின் பெயராகவும் இது விளங்குகின்றது.

எனவே ^சண்முகம், வில்லியம் ^சாக்லி , ^சோபனா முதலியனவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

சரசுவதி என்று எழுதுவது நல்லது. ஆனால் சிலர் சர~ச்வதி என்று எழுத வேண்டும் என்கிறார்கள்.

அனுமான் என்றாலே போதும். ஆனால் சிலர் ஃஅனுமான் என்று எழுத வேண்டும் என்பர்.

ஆகவே புது எழுத்துகள் ஏதும் இல்லாமல், ஒலித் திரிபுக் குறிகளை மட்டுமே கொண்டு, தமிழ் முறைக்கு முரண்பட்டு வரும் சில இடங்களிலும், தமிழில் வழங்காத ஒலிகளையும் குறிக்க முடியும்.

சுருங்கச் சொன்னால்:
ga = 'க, ja = 'ச, da = 'ட , dha = 'த , ba = 'ப , fa = 'வ ,
ha= ஃஅ, sha = ^ச, sa = ~ச, za= *ச

எழுதிப்பாருங்கள் எத்தனை எளிதாக இருக்கின்றது என்று!
ஒரே ஒரு குறிதான் வேண்டும் ga, ja, da, dha, ba, fa ஆகிய ஆறுக்கும்.
இந்த சகர வேறுபாடுகளுக்குத்தான் ^ ~ *ஆகிய மூன்று குறிகள். ஷ ஸ, z ஆகிய மூன்று எழுத்துகளும் அவைகளின் இகர உகர முதலிய வேறுபாடுகள் ஏதும் தேவை இல்லாமல் எளிதாக இந்த ஒலித் திரிபுக் குறிகளை மட்டுமே கொண்டு எழுதலாம். தமிழ் போற்றுவோர் அனைவரும் எடுத்தாளுங்கள்!

நன்றி

செல்வா
வாட்டர்லூ, கனடா
9 மார்ச் 20007