இலக்கணம், இலக்கியம் ஆகிய சொற்கள் தூய தமிழ்ச்சொற்கள்

இலக்கணம் இலக்கியம் ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள்
இவற்றை சமற்கிருதத்தில் இருந்து வந்தவை என்பது சில சமற்கிருதப் பற்றாளர்கள்
சொல்லிவரும் ஒரு செல்லாக் கருத்து.
சமற்கிருதத்தில் வியாகரணம் என்னும் சொல்தான் இலக்கணத்தைக் குறிப்பது.
இலக்கு + அணம் = இலக்கணம்.
இலக்கு + இயம் = இலக்கியம்..
இதில் வரும் -அணம் என்னும் பின்னொட்டு பற்றிய கேள்வி ஒன்றுக்கு
நான் கூறிய விடையை இங்கே பகிர்கின்றேன்.
அணம் என்பது ஒரு பின்னொட்டு.
பொருள் பொதிந்த ஒன்றுங்கூட.

ஏராளமான தமிழ்ச்சொற்கள் இந்த அணம் என்னும் பின்னொட்டைக் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளன.
கட்டணம் என்பதை அனைவரும் அறிவர்.
கட்டு+அணம் = கட்டணம்
இதே போல ஒத்தணம் என்பது ஒத்தடம் கொடுப்பது.
ஓற்று ஒத்து + அணம் = ஒத்தணம்.
இதே போல
பூசணம், பூஞ்சணம் என்பது பூஞ்சைக்காளான், சிக்கணம் என்பது சிக்கல்,
தூங்கணம் என்பது தொங்கும் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவி.
தீக்கணம் என்பது தீமூட்டும் தீக்கோல்,
உரலில் கூலிக்கு நெல் குத்துபவளைக் கொட்டணக்காரி என்பர்.
இங்கே கொட்டணம் என்பது குத்துதல்.
கொட்டுதல் => கொட்டு + அணம் = கொட்டணம்
சப்பணம் சப்பளாங்கால் போடுதல்,
அதாவது கால்களைப் பின்னி ''சப்பையாக''
அமரும் ஓர் இருக்கைநிலை.
பொட்டணம் என்பது பொட்டலம்.
காக்கட்டாஞ்செடியைக் காக்கணம் என்பார்,
எருது எக்காளமிடுவதை எக்கரணம்
என்பார்கள். எக்கரவம் என்பது இன்னொரு சொல்.
காட்டுச் சீரகம் காட்டணம்,
கழுத்தில் அணியும் ஒரு வகை நகை கப்பணம்.
கப்பலில் குறுக்கே போடப்படும் ஒரு கட்டைக்குக் கூரணம் என்று பெயர்.
இதனைக் கூர்வை என்றும் சொல்வார்கள்.
காவணம் என்பது கூரை.
பலாக்கணம் என்பதை மக்கள் பிலாக்கணம் பாடுதல் என்பார்கள்.
ஆடும் பல்லால் ஏற்படும் நோய்க்குப் பல்லணம் என்பார்கள்,
நாவணம் உள் நாக்கு (உண்ணாக்கு).
துளையிடும் கருவியின் துருவும் முனைக்குத் துரப்பணம் என்றார்கள்,
துரப்பு என்றால் துருவுதல் துளையிடுதல்,
பொக்கணம் என்பது முடக்கத்தான் கொடி அல்லது துறவியின் பை.
ஆக இப்படிப் பல சொற்கள் தமிழில்
-அணம் என முடியும். அணத்தல் என்றால் பொருத்துதல்,
தலையெடுத்தல், மேலெடுத்தல் (அணர், அணல் என பற்பல சொற்களைச் சொல்லலாம்.
அணம் என்றால் மேல்வாய் , மேவாய்க் கட்டு,
அணவல் என்றாலும் அணுகுதல், பொருத்துதல் என்று பொருள்.
ஆகவே அணம் என்பது பலகோணங்களில் ஒரு பின்னொட்டுச் சொல்லாக
ஆகி வழங்கி வருகின்றது.

எனவே இலக்கு + அணம் - இலக்கணம் என்பது சரியான சொல்.
சொல்லறிஞர் ப. அருளியார், பேராசிரியர் சி. இலக்குவனார் போன்ற எத்தநையோ பேர் இவை தமிழ்தாம் என்று நிறுவியுள்ளார்கள்.
இப்பதிவில் என் கருத்துகளை, பகிர்ந்துள்ளேன்.
செல்வா (செ.இரா. செல்வக்குமார்)

Comments

Popular posts from this blog

அழிஞ்சி, அழிஞ்சல், நெட்டிலஞ்சி (முகநூல் பதிவு)

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு